இலங்கை சுதந்திரம் அடைந்தபின்னர் அதிஉயர் பொருளாதார வளர்ச்சியை கடந்த வருடம் பதிவு செய்துள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்தார்.
இன்று (09) காலை நடைபெற்ற 2011 ஆம் வருடத்துக்கான மத்திய வங்கி அறிக்கை வெளியிடும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்-
இலங்கை மத்திய வங்கியின் 62 ஆவது ஆண்டறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாட்டின் ஜனாதிபதி என்ற வகையிலும் நிதி அமைச்சர் என்ற வகையிலும் நான் ஆறு தடவைகள் மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை வெளியிடும் வைபவத்தில் கலந்துகொண்டுள்ளேன்.
உலக நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ள இக்காலகட்டத்தில் இலங்கை 8.3 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இந்த பொருளாதர வளர்ச்சியின் அநுகூலங்கள் நாட்டின் சாதாரண பிரஜைகளையும் சென்றடைவதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
30 வருட கொடூர யுத்தத்துக்கு பின்னணியில் செயற்பட்ட சக்திகள் இன்று சர்வதேச ரீதியில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை நாட்டு மக்கள் மறந்துவிடக்கூடாது.
இன்று நாடு பலதுறைகளிலும் வளர்ச்சி கண்டுவருகின்றது. நாடு முழுவதிலும் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளன. நாம் அடைந்துள்ள சுதந்திரத்தை அனுபவிக்க நாம் அவதானத்துடன் செயற்படவேண்டும்.
இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஒரே இரவில் ஏற்படுத்திவிட முடியாது. எமது நாட்டின் பிரச்சினைக்கு வெளிநாடுகளில் இருந்து தீர்வை இறக்குமதி செய்ய முடியாது. தீர்வுத் திட்டம் எமது நாட்டுக்குள்ளேயே உருவாகவேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
ADADARUNA
No comments:
Post a Comment