Friday, April 06, 2012

இடம்பெயர்ந்தோர் நிவாரணம் ஜூன் மாதத்துடன் நிறுத்தப்படும்; மீள்குடியமர்வு முடியமுன் அரசு அறிவிப்பு

news
 இடம்பெயர்ந்த மக்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்பட்டு வந்த நிவாரணங்கள் அனைத்தையும் எதிர்வரும் ஜூன் மாதத்துடன் நிறுத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு அறிவித்துள்ளது.
 
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
 
வடக்கில் யுத்த நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சினால் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களினூடாக நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது. ஆயினும் 97 சதவீதமான மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பியுள்ளதால் இந்த நிவாரணத்தை எதிர்வரும் ஜூன் மாதத்துடன் நிறுத்திவிட அரசு தீர்மானித்துள்ளது.
 
வடக்கில் 2 லட்சத்து 72 ஆயிரம் பேர் வரையில் இடம்பெயர்ந்திருந்தனர். இவர்களில் 2 லட்சத்து 65 ஆயிரத்து 960 பேர் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இன்னும் 6 ஆயிரத்து 40 பேரே மீளக்குடியமர்த்தப்பட வேண்டியுள்ளனர். எனவே எதிர்வரும் ஜூன் மாதத்துடன் நிவாரணம் வழங்குவதை முற்றாக நிறுத்தி விட அரசு தீர்மானித்துள்ளது.
 
இதேவேளை யாழ். மாவட்டத்தில் வழங்கப்பட்டு வந்த இடம் பெயர்ந்தோருக்கான நிவாரணம் கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறுத்தப்பட்டுவிட்டது. அதனைத் தொடர்ந்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட போதும் இதுவரை அந்த நிவாரணம் வழங்கப்படவில்லை.
 
இந்த விடயம் தொடர்பில் மாவட்ட செயலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, மீள்குடியேற்ற அமைச்சு தமக்கு இன்னும் திறைசேரியிலிருந்து நிதி ஒதுக்கப்படவில்லை எனத் தெரிவித்ததாக மாவட்ட செயலக வட்டாரங்கள் கூறின.
 
யாழ். மாவட்டத்தில் 23 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் இன்னும் மீளக்குடியமர்த்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Thanks :lankanow

No comments:

Post a Comment