Friday, April 20, 2012

தஃவா களத்தில் Manhood - ஆண்மையின் அர்த்தம் புரியாத தாயிகள்.......



“கண்ணீர் தடம் - ஒரு மௌலவியாவின் வாக்குமூலம் ” எனும் கட்டுரையை நீங்கள் வாசித்திருப்பீர்கள். இன்றைய சமகால தஃவா களத்தில் தாயிகள் என களமிறங்கியுள்ள பல மொளலவிகளும், ஏனைய சிலரும் “இஸ்லாத்தில் பலதார மணம்” எனும் விடயத்தை மலினப்படுத்தியுள்ளனர். புனித இஸ்லாம் கூறும் விதி முறைகளிற்கு மாற்றமாக திருமணம் முடிப்பதுடன், திருமணம் முடிக்க தகுதியில்லாத மனிதர்கள் எல்லாம் தஃவாவின் பெயரில் இஸ்லாமிய திருமணங்களை கேள்விக்குட்படுத்தியுள்ளனர். ஓர் ஆண் நான்கு பெண்களை மணமுடிக்க முடியும் எனும் மார்க்க அனுமதியை வைத்து கொண்டு இவர்கள் காட்டும் வித்தைகள் ஏராளம். Masculinity மட்டுமே ஆண்மை என நினைக்கும் தாயிகளே எம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
எமது நாட்டில் முஸ்லிம் பெண்களது பிரச்சனைகளை இனங்கண்டு அதற்கான தீர்வுகளை இஸ்லாம் சொல்லும் விதத்தில் வழங்கும் அமைப்புக்களோ, வழிகாட்டல் மையங்களோ இல்லை என்பதே உண்மை. நபி ஸல்லல்லாஹீ அலைஹிவஸல்லம் நவின்றார்கள் “பெண் என்பவள் பளிங்கு பாத்திரம் போன்றவள். அதை பாதுகாப்பது உனது கடமை” என. ஆனால் அவரது கூற்றிற்கு நேர்மாறான விடயங்களே இன்று விவகாரங்களாக மாறி நிற்கின்றன.

சாதாரண முஸ்லிம்கள், மேற்கத்தைய மோகத்தை வாழ்வின் இலட்சியமாக கைக்கொண்ட முஸ்லிம்கள் பற்றி இங்கு நாம் பேசவில்லை. சத்திய மார்க்கத்திற்கு சான்று பகர்பவர்களாக கூறிக்கொண்டு தஃவா பாதையில் தடம் பதிக்கும் தாயிகளும் பெண்கள் விடயத்தில் தவறிழைப்பது வருந்தத்தக்கது.

ஒரு பிரபல மார்க்கவாதி. தன்னை மார்க்க அறிஞர் என்று வேறு மறைமுகமாக சொல்பவர். பத்வாக்கள் பல வழங்கியவர். தனது முதல் மனைவியை, அவரும் ஒரு மௌலவியா என்பது வேறு விடயம். திருமணம் முடித்த சில மாதங்களில் தலாக் சொன்னார். காரணம் அவள் கறுப்பு நிறம். அலுப்பு தட்டி விட்டது. தஃவாவிற்கு ஆதரவாக செயற்பட என தீவிரவாத மனோபாவத்தில் வேகமாக மொளலவியாவை தேடி மணந்து பின் வெள்ளை தோலிற்கு ஆசைப்படும் மனோபாவம் இவரிற்கு. மேற்குலகின் உற்பத்தியான பல்வேறுபட்ட கிறீம்களை பூசச்சொல்லி வற்புறுத்தி வெயிலில் நிற்க வைத்து அவளை வெள்ளையாக மாற்ற முயற்ச்சி செய்து தோற்றுப் போனவர். விவாகரத்தான பின் அந்த பெண் இப்போது நன்றாக வாழ்கிறார்.

இறைபாதையில் புறப்பட்டு சென்று தஃவா செய்யும் பல தாயிகள் தாங்கள் செல்லும் கிராமங்களில் இரண்டாவது தாரமாக ஒரு பெண்ணை மணக்கின்றனர். மூத்த மனைவிக்கு விவகாரத்தை மறைத்தும் விடுகின்றனர்.  இருந்து விட்டு ஒரு முறை சென்று அரை நாளையோ, ஒரு நாளையோ கழித்து விட்டு வருகின்றனர். இரு மனைவியரையும் சமமாக நடாத்தும் படி மார்க்கம் கட்டளையி அதற்கு மாற்றமாக நடக்கும் இவர்கள் தான் திருமணம் என்றவுடன் நபியின் சுன்னத்து பற்றி பேசுபவர்கள்.

எழுந்தால் தஃவா. நின்றால் தஃவா. செல்போனில் தஃவா. மெக்டொனால்ஸில் வைத்தும் தஃவா என “தஃவாவை” தம் மூச்சாக கொண்ட இன்னொரு கூட்டம். நபியின் சுன்னாவில் தீராத மோகம் கொண்டவர்கள். சுன்னாவை ஹயாத்தாக்க மௌத்தாகவும் தயாரானவர்கள். நபியின் சுன்னாஹ் என்று சொல்லி இன்னொரு பெண்ணை மணக்கின்றனர். அந்த பெண்ணும் இந்த தாயியின் தஃவா களசெயற்பாடுகளை கண்டு வியந்து உடனேயே மணமுடிக்கிறாள். இப்போது வாழ்க்கை என்று வரும் போது விடயம் முதல் மனைவிக்கு தெரிய வருகிறது. தாயி உடனேயே சுன்னாவை மறந்து மனைவியிடம் மண்டியிடுகிறார். காலையில் மட்டும் களவில் இரண்டாம் மனைவியிடம் வந்து செல்கிறார். இங்கு நபியின் “இஸ்லாத்தில் மனைவியரிடம் சமமாக நடக்கும்” சட்டங்கள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. சுன்னாவை நிலை நாட்டவும் ஆசை. முதல் மனைவிக்கும் பயம். இந்த கோழைகளை என்ன சொல்வது. தங்கள் காம வேட்கைக்கு வெராயட்டி தேடும் மிருகங்களையே சுன்னாவின் பெயரில் காணும் அவலம் நிறைந்து போயுள்ளன.

குதிரையேற்றம், வாள் பயிற்சி, நீச்சல் போன்றவையும் நபி அறிவுருத்திய சுன்னாக்களே. கேவலம் காஸாவின் முஸ்லிம்களிற்காக ஒரு துளி கண்ணீர் விடாத இவர்கள் “திருமணம்” என்ற விடயத்தில் மட்டும் சுன்னாவில் பிண்ணி பிணைந்து விடுகின்றனர்.

சரி, மணமுடித்தார்கள். சமமாகவும் நீதமாகவும் தமது வாழ்க்கையை பங்கீடு செய்யவில்லை. குறைந்த பட்சம் தொடர்ந்து வாழ்ந்தார்களா என்று பார்த்தால் அதுவும் இல்லை. இருக்கவே இருக்கிறது “தலாக்”. ஏதோ காட்ஸ் விளையாடுவது போல் மாற்றி மாற்றி மணமுடிக்கிறார்கள். தோப்புகளை மாற்றுவது போல். மனைவியரை மணமுடிப்பதும், பின்பு இஸ்லாத்தை சாட்டாக காட்டி ஈமானில்லை, தக்வா போதாது, அகீதாவில் குளருபடி என சொல்லி கழட்டி விடுகிறார்கள். இது தான் இவர்கள் காட்டித்தரும் இஸ்லாம்.

இவர்கள் இதனுடன் விட்டார்களா. இது போதாதென்று இஸ்லாத்தின் பால் ஆர்வம் கொண்டு மதம் மாறி புனித இஸ்லாத்தை ஏற்கும் மாற்று மத சகோதரிகளையும் விட்டு வைக்கவில்லை. மீன்பிடிப்பது போல வலை வீசி தனது தஃவா வித்தையை காட்டி மணமுடித்து இரண்டு குழந்தைகளிற்கு தாயாக்கிவிட்டு கைகழுவும் எத்தனை வழக்குகள் ஹாதி கோட்டில் வந்து செல்கின்றன. முன்மாதிரி முஸ்லிமாக தன்னை உருவகப்படுத்தி, பல விடயங்களில் நடந்து காட்டும் இவர்கள் தான் இதையும் செய்கிறார்கள்.

நெஞ்சில் துணிவில்லை. நீதமாக நடக்கும் மனம் இல்லை. செலவிற்கான காசை கொடுத்தால் போதும். என எண்ணியே இன்று பல இரண்டாம் தார திருமணங்கள் நடக்கின்றன. இவர்களின் பார்வைியில் “ஆண்மை” என்பது கட்டிலை வெற்றி கொள்வதென்பது மட்டுமே. இந்த கோழைகளால் வாழ்விழந்த பெண்கள் ஏராளம். வாழ்ந்தும் வாழ முடியாமல் தவிக்கும் பெண்களும் ஏராளம்.

5 இஞ்சி தாடி. வெள்ளை தோப். வெள்ளை தொப்பி. கொஞ்சம் அரபு சொற்கள். அடிக்கடி பயான்களில் கலந்து கொள்வது. பயான் சீடி. இவை இருந்தால் போதும். அவர் இன்று சமூகத்தில் ஒரு பிரச்சாரகராக, உலமாவாக ஏற்று கொள்ளப்பட்டு விடுகிறார். இந்த அங்கீகாரம் மட்டும் போதும் இன்னொரு கல்யாணம் முடிக்க. முடிக்கிறார்.

இப்போது பல பிரச்சனைகள். நீதமாக நாட்களை பகிர முடியாமை. சிலரிற்கு போதிய வருமானம் இல்லாத நிலையில் அல்லாஹ் பரகத் செய்வான் என்று சொல்லிக்கொண்டே இரண்டாவது கல்யாணம் செய்ய போகிறார்கள். இன்னும் சிலரிற்கு முதல் மனைவியையே திருப்தி படுத்த முடியாத நிலை. இந்த இலட்சணத்தில் இரண்டாவதும் மூன்றாவதும் கேட்கிறது. திக்ரு செய்யும் நாக்களை விட லேகியம் சப்பிய நாக்களே இவர்களிடம் அதிகம்.

இதை நாம் எழுதும் நோக்கம் பலதார மணங்களை தவறென்று சொல்வதற்காக அல்ல. அது பாராட்டத்தக்கது. நல்ல விடயம். பரகத் நிறைந்தது. ஆனால் அதை செய்வதற்கு முன் நாம் அதற்கு தயாரான தகுதி நம்மிடம் இருக்கிறதா என எண்ணி பார்க்க வேண்டும்.



தங்கள் வாழ்க்கையில் நடந்த சோகங்களை சொல்ல முடியாத பெண்கள் 99 பேர். ஒருவராலேயே அதை பற்றி வாய் திறக்க முடிகிறது. எழுத முடிகிறது. பேச முடிகிறது. இந்த பெண்கள் பற்றியும், இனியும் இந்த வலையில் விழ காத்திருக்கும் பெண்கள் பற்றியும் எம்மிடம் எண்ண சமூக அக்கறை எஞ்சி நிற்கிறது. பெண்கள் இப்படி சீரழிக்கப்பட்டால் நாளைய முஸ்லிம் சமுதாயம் மிக மோசமான கலாச்சாரங்களிற்கு சொந்தக்காரர்களாக இந்த நாட்டில் உருவாவர். மனித வடிவில், பிரச்சாரகர்கள் வடிவில் நடமாடும் இந்த கோழை மிருகங்கள் பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியம். இது தொடர்பான சிந்தனைகளிற்கான ஒரு கீற்று மட்டுமே இந்த ஆக்கம். வல்ல இறைவன் எம் பெண்களை இந்த விடயத்தில் விழிப்புணர்வு மிக்கவர்களாக மாற்றுவானக!

No comments:

Post a Comment