ஒன்பது ஆண்டுகளுக்கு முன் இதே வாரத்தில், மார்ச் 20, 2003ல் அமெரிக்காவும், பிரித்தானியா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட அதன் நட்பு நாடுகளும், ஈராக் மீது ஒரு சட்டவிரோதப் படையெடுப்பை தொடக்கின. போரை நியாயப்படுத்தக் கூறப்பட்ட போலிக் காரணங்கள் அனைத்தும் பொய்கள்தான். பேரழிவு ஆயுதங்கள் ஈராக்கில் இல்லை, ஈராக்கியத் தலைவர் சதாம் ஹுசைனுக்கும் அல்-குவேடாவிற்கும் இடையே தொடர்புகள் ஏதும்இல்லை. நீடித்த அமெரிக்க ஆக்கிரமிப்பு ஒரு சர்வாதிகார, அமெரிக்க சார்புடைய ஆட்சி ஏற்பட்டதில் விளைவைக் கொண்டது; ஒரு மில்லியன் ஈராக்கியர்கள் இறந்தனர் மற்றும் பெரும் சமூக, மற்றும் பொருளாதாரப் பின்னடைவும் ஏற்பட்டன.
இப்படையெடுப்பு முன்னோடியில்லாத தன்மையில் சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த போர் எதிர்ப்புப் போராட்டங்களைத் தூண்டியது. அமெரிக்க முயற்சியின் ஆழ்ந்த குற்றத் தன்மையினால் உந்துதல் பெற்ற மில்லியன் கணக்கான மக்கள் உலகம் முழுவதும் தெருக்களுக்கு வந்து போர் உந்துதலை எதிர்த்தனர். இது எண்ணெய் வளமுடைய ஈராக் மற்றும் பரந்தமுறையில் மத்திய கிழக்கில் தன் ஆதிக்கத்தைப் பெறுவதற்காக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடித்தளத்தில் இருந்த “எண்ணெய்க்கான போர்”என்றுதான் பரந்த அளவில் உணரப்பட்டது.
ஆனால் இதன் பரப்பு, தீவிரம் ஆகியவற்றையும் மீறி, இந்த எதிர்ப்புக்கள் போரை நிறுத்த முடியவில்லை. ஒன்பது ஆண்டுகளுக்குப்பின் அதே ஏகாதிபத்திய விழைவுகளை ஒபாமா நிர்வாகம் தொடர்கையில், பொறுப்பற்ற தன்மையில் அதன் அச்சுறுத்தல்கள், தயாரிப்புகள் என்று ஈரானுக்கு எதிராக நிற்கையில், உலகம் இன்னும் பெரும் பேரழிவுகளின் விளிம்பில்தான், நிற்கிறது. இன்று வெகுஜன போர் எதிர்ப்பு இயக்கம் இல்லாத நிலை 2003 எதிர்ப்புக்களின் தோல்வி குறித்து வினாக்களை எழுப்புகிறது; மேலும் இராணுவவாதம், போர் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டத்தை எப்படிப் புதுப்பிப்பது என்ற வினாவையும் எழுப்புகிறது.
தொழிலாள வர்க்கத்தினரிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே, கடந்த இரு தசாப்தங்களாக நடக்கும் தளர்ச்சியற்ற இராணுவவாதத்திற்கு எதிர்ப்பில் குறைவு ஏதும் இல்லை. ஆனால் உண்மையான போரெதிர்ப்பு இயக்கம், போரின் வேர்களுக்கு எதிராக இயக்கப்படுவது—அதாவது இலாப முறைக்கு எதிராக—முறையாக இடது தாராளவாதிகள், பசுமைவாதிகள், எல்லாவற்றிற்கும் மேலாக பல போலி இடது அமைப்புக்களால் தடுக்கப்படுகிறது. இந்த நபர்களும் அமைப்புக்களும் தொழிலாள வர்க்கம், அதன் சுயாதீன அணிதிரள்வு மீது ஆழ்ந்த விரோதப் போக்கைக் கொண்டுள்ளன. அவர்களுடைய சமூகத் தளம் ஒரு குறுகிய மத்தியதர வர்க்கத்தின் செழிப்பு நிறைந்த பிரிவு ஆகும்; இது மோசமாகிவரும் முதலாளித்துவ நெருக்கடியின் பாதிப்பை ஒட்டித் தீவிர வலதிற்கு நகர்ந்துள்ளது. இத்தட்டுத்தான் தன் நலன்களை பெருகிய முறையில் ஏகாதிபத்திய சக்தியுடன் இணைத்து அடையாளம் காண்கிறது.
1960, 1970 களில் வியட்நாம் போரை எதிர்த்த மத்தியதர வர்க்க இடதுகள் ஏகாதிபத்திய போருக்கு வாதிடுபவர்களாக படிப்படியாக மாறிவிட்டனர். இந்த வழிவகை ஏற்கனவே 1990களின் பால்கன் போர்களில் வெளிப்படையாயிற்று: அப்பொழுது முன்னாள் போர் எதிர்ப்புத் தலைவர்களின் கணிசமான பிரிவு, நேரடியாக நேட்டோவின் தலைமையையும் அதன் போலித்தன பொஸ்னிய முஸ்லிம்கள், பின்னர் கொசோவோக்களின் நலன்களைப் பாதுகாத்தல் என்னும் மனிதாபிமான கூற்றை ஆதரித்தது. சேர்பியா மீதான வாஷிங்டனின் தாக்குதலுக்குப் பின்னணியில், கிழக்கு ஐரோப்பா மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச ஆட்சிகளின் சரிவு திறந்துவிட்ட வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்னும் உந்துதல்தான் காணப்பட்டது.
பால்கன் தலையீடுகளுக்கு ஆதரித்தவர்களில் பலரும் அதே போன்ற போலித்தன மனிதாபிமானக் காரணங்களைப் பயன்படுத்தி ஈராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பை, “சர்வாதிகாரி ஹுசைனை அகற்றுதல்”என்ற பெயரில் ஆதரித்தனர். இதையும்விடத் தீமையானது தாராளவாதிகள்,“இடதுகள்” என்று 2003 போர் எதிர்ப்பு வெகுஜன இயக்கத்தில் மேலாதிக்கம் செலுத்தியவர்கள் இப்படையடுப்பு ஐக்கிய நாடுகள் சபை, பிரான்ஸ் அல்லது ஜேர்மனிக்கு தலையீட்டால் தடுத்துநிறுத்திவிடப்பட முடியும் என்ற போலித் தோற்றத்தை வளர்த்ததுதான். பிந்தையவை ஐ.நா.வில் தங்கள் ஏகாதிபத்திய நலன்களை மத்திய கிழக்கில் பாதுகாப்பதற்காக போரை எதிர்த்தன; ஆனால் அமெரிக்க ஆக்கிரமிப்பு நடைமுறை உண்மையான பின், அந்நாட்டுடன் இணைந்து செயல்பட்டன.
கடந்த ஆண்டு வெட்கமின்றி லிபியா மீதான நேட்டோப் போருக்கு , இதே போலித்தன, வெற்று மனிதாபிமானக் காரணத்தைப் பயன்படுத்தி அனைத்து முன்னாள் இடது அமைப்புக்களும் ஒன்றாக வந்தன: “சர்வாதிகாரி கடாபியை”அகற்ற அனைத்து வழிவகைகளும் நியாயப்படுத்தப்பட்டன. நேட்டோக் குண்டுத் தாக்குதல்களை பெயரளவிற்கு “எதிர்த்தவை”கூட நேட்டோவின் தரைப்படைகளுக்கு ஆதரவு கொடுத்தன—பல இஸ்லாமியவாதிகள், முன்னாள் கடாபி விசுவாசிகள், பழங்குடித் தலைவர்கள் மற்றும் முதலாளித்துவத் தாராளவாதிகள் நேட்டோ ஆதரவு பெற்ற NTC எனப்பட்ட தேசிய இடைக்காலக் குழுவிற்கு. இதன் விளைவு திரிப்போலியில் ஒரு ஜனநாயக விரோத ஆட்சி, இன்னும் தாழ்ந்து வாஷிங்டனுக்கு நின்று அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்திய நலன்களுக்குப் பணிபுரிவது, மற்றும் நாடு பழங்குடி, பிராந்திய வகையில் சிதைக்கப்பட்டது ஆகியவற்றை ஏற்படுத்தியதுதான்; இது கட்டுப்படுத்த முடியாத உள்நாட்டுப் போர் வெடிக்கலாம் என்று அச்சறுத்துகிறது.
கடந்த இரு தசாப்தங்களில் அமெரிக்க முதலாளித்துவத்தின் வெடிப்பிற்குப் பின்னணியில் அதன் வரலாற்றுச் சரிவை ஈடுசெய்வதற்காக, ஐரோப்பிய, ஆசியப் போட்டி நாடுகளின் இழப்பில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ மேன்மையை அடுத்தடுத்த நிர்வாகங்கள் மேற்கோண்ட முயற்சிகள்தான் உள்ளன. இந்த வழிவகைகள் ஒபாமா நிர்வாகத்தின் கீழ் விரைவுபடுத்தப்பட்டுள்ளன; ஆழ்ந்த உலகப் பொருளாதார நெருக்கடியும் இதற்கு உதவியுள்ளது. ஈரான் மற்றும் சிரியாவிற்கு எதிரான தற்போதைய போர் உந்துதல் முழு மத்திய கிழக்கையும் சூழும் என்ற அச்சுறுத்தலை மட்டும் கொண்டிராமல், சீனா, ரஷ்யா போன்ற நாடுகளையும், மற்றவற்றையும் இதில் இழுக்க முடியும்.
போர் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிரான ஒரு புதிய சர்வதேச இயக்கம், ஏகாதிபத்திய மோதலின் அடிப்படைக் காரணம், அரசியல்வாதிகள் தன்னிலைக் கூறுபாடுகளினாலோ, தவறான கொள்கைகளினாலோ இல்லை என்ற உணர்வின் அடிப்படையைத் தளமாகக் கொண்டிருக்க வேண்டும். அமெரிக்கா, ஐரோப்பா இன்னும் பிற இடங்களில் குற்றம் சார்ந்த தன்மை மற்றும் பொறுப்பற்றதன்மை—உலகப் பொருளாதாரத்திற்கும் காலம்கடந்துவிட்ட தேசிய அரச முறைக்கும் இடையேயும், சமூகமயப்படுத்தப்பட்ட உற்பத்திமுறைக்கும் தனியார் உற்பத்திமுறைக்கும் இடையேயுள்ள அடிப்படை முரண்பாடுகள்தான். போருக்கு எதிராக நிலைக்கக்கூடிய இயக்கத்திற்கு தொழிலாள வர்க்கம் அதன் சுயாதீன அணிதிரள்வை ஒரு புரட்சிகர சக்தியாக இலாபமுறையை அகற்றுவதற்காக மேற்கொள்ளப்படுதலும், சோசலிசத்தை நிறுவுதலும் தேவையாகும். அத்தகைய இயக்கம் இந்த முன்னோக்கை கடுமையாக எதிர்க்கும் முன்னாள் இடதுகளுக்கு எதிரான அரசியல் போராட்டத்தின் மூலம்தான் கட்டமைக்கப்பட முடியும்; ஏனெனில் அவர்கள் இன்னும் வெளிப்படையாக ஏகாதிபத்தியத்திற்கு பிரச்சாரகர்களாகவும் மன்னிப்பு அளிப்பவர்களாகவும் செயல்படுகின்றனர்.

No comments:
Post a Comment